தமிழக மக்களுக்கு தலை வணங்கும் கேரளா ! உதவிய உள்ளங்களுக்கு நன்றி சொன்ன பினராயி விஜயன் !!
கேரளாவில் மழை வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து தமிழக மக்கள் மனிதாபிமான உணர்வுடன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்ததற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவில் இதுவரை மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து பொதுமக்களால் கேரளாவிற்கு ஏராளனமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் இரு தினங்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் 82 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், "தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்" என தெரிவித்தார்.
தனது மற்றொரு ட்வீட்டில், "சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.