கேரளாவில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட மது !! அவரது குடும்பம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா ?
கேரளாவில் பசிக்கு அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட மது என்ற பழங்குடியின இளைஞரின் சகோதரி தற்போது கேரள காவல் துறையில் பணியாற்றி வருகிறார். தனக்கு கிடைத்திருக்கும் இந்த அரசுப் பணியை இரக்கமே இல்லாமல் அடித்துக் கொல்லப்பட்ட தனது சகோதரனுக்கு சமர்ப்பணம் செய்வதாக அந்தப் பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த மது என்ற பழங்குடியின இளைஞர் காட்டுப் பகுதிக்குள் தனது தாள் மற்றும் தங்கைகளுடன் வசித்து வந்தார், அவர் அங்குள்ள கிராமப் பகுதிக்கு வந்தது அவ்வப்பொழுது அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வார்.
கடந்த பிப்ரவரி மாதம் வழக்கம் போல் மது அரிசி வாங்கிச் செல்லும்போது, அவரை அரிசி திருடிச் செல்கிறார் என நினைத்து சில இளைஞர்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் செல்பி எடுத்து முகநூலில் பதிவிட்டனர்.
அதே நேரத்தில் கடுமையாக தாக்கப்பட்ட மது சில நிமிடங்களில் மரணமடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மதுவின் வீட்டுக்கே நேரில் சென்று தாய் மற்றும் தங்கையிடம் ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது மதுவின் சகோதரி சந்திரிகாவுக்கு கேரள அரசு காவல் துறையில் பணி வழங்கியுள்ளது. பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சந்திரிகாவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பணி நியமன ஆணையை வழங்கினார்.
தற்போது காவலராக பணியாற்றி வரும் சந்திரிகா, தனது கணவர், குழந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். தற்போது தனக்கு கிடைத்திருக்கும் இந்த பதவியை கொல்லப்பட்ட தனது அண்ணன் மதுவுக்கு சமர்ப்பணம் செய்தவதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தன்னை மிகுந்த வருத்தப் வைப்பதாகவும், பழங்குடியின மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்காக உழைக்கப் போவதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.