கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகதான்... பொறுப்பேற்றதும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு..!
கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்தது திமுகதான் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அவருக்கு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனையத்து இணையமைச்சராக எல்.முருகன் டெல்லியில் இன்று பொறுப்பேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமரும் உள்துறை அமைச்சரும் வழங்கி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மிகப்பெரிய துறையாக இருப்பது மீன் வளம்தான். அந்தத் துறையில் நான் மத்தியில் அமர்ந்துள்ளேன். இந்தப் பொறுப்பின் மூலம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நான் பாலமாகச் செயல்படுவேன். மீன்வளத்தைப் பெருக்கவும், மீனவர் நலனைப் பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பேன். ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீனவர் நலன் அவர்களுக்கான மானியம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் காப்பேன்.
2016-ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது இருந்தது. முன்பைவிட இப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறைந்திருக்கிறது. கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தது திமுகதான்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.