‘திமுக குடும்ப கட்சி தான்’ - திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘போஸ்டர்’
கரூரில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக கரூரில் திமுக - அதிமுக இரண்டு கட்சிகளின் அட்டகாசம் அடிக்கடி நடப்பது உண்டு. அதிமுக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தால், உடனே திமுக சார்பிலும் அது போன்ற நிகழ்ச்சி நடந்து விடும்.இது போஸ்டர்,ப்ளெக்ஸ் பேனர்,அடிதடி என தொடர்ந்து ‘அட்டகாசங்கள்’ நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேலி கூத்துக்கள் நடைபெற்று வருகிறது. திமுக குடும்ப கட்சி என்று அதிமுகவினரால் தொடர்ந்து கூறப்படும் குற்றசாட்டு ஆகும். கரூரில் அண்மையில் ஒட்டப்பட்ட போஸ்டர் உண்மையில் திமுக ‘குடும்ப கட்சி’ தான் போல என்று உடன்பிறப்புகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக ஆண்டாள் ஜி.பாலகுரு தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கம் போல அவரை நியமனம் செய்ததற்காக கரூர் மாவட்ட ஆட்டோ முன்னேற்ற சங்கம் சார்பில் ‘போஸ்டர்கள்’ கரூர் முழுவதும் ஒட்டப்பட்டன. அதில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் புகைப்படத்தினை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அளவில் போட்டுள்னனர். அடுத்து செந்தில்பாலாஜியின் புகைப்படம் பெரிய அளவிலும், உதயநிதியின் படம் சிறிய அளவிலும் போட்டுள்ளார்கள். இதுமட்டுமல்லாமல் செந்தில்பாலாஜியின் புகைப்படத்திற்கு கீழே அவரது தம்பி அசோக் குமார் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அதாவது, கட்சியின் பொறுப்பில் இல்லாத ஒருவரின் படத்தினை எவ்வாறு கட்சியின் போஸ்டரில் போட முடியும்.ஏற்கனவே திமுக தலைமையில் தான், அடுத்தடுத்து வாரிசு அரசியல் என்றால், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தன் கடமைக்கு குடும்ப அரசியலை கையில் எடுப்பது சரியா ? என்று ஆதங்கப்படுகின்றனர் உடன்பிறப்புகள்.இவர்கள் கவலை ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் உதயநிதியின் ஆதரவாளர்களுக்கு ஒரு கவலை. உதயநிதி நடிகர் மட்டுமல்ல, சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.கட்சியின் இளைஞரணி செயலாளர், அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலினின் மகனும் கூட. அமைச்சர் செந்தில் பாலாஜியின் படத்தினை விட சிறிய அளவில் போடுவது தவறானது.இந்த போஸ்டரை ஒட்ட அமைச்சர் எப்படி அனுமதி கொடுத்தார் என்று தெரியவில்லை என்று புலம்புகின்றனர் திமுகவின் உபிக்கள்.