இப்படி செய்வது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல.. அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்கிறாரா கருப்பு முருகானந்தம்?
நம் கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால திட்டங்களுக்கும் அனைத்து நிர்வாகிகளிடமும் விவாதித்து முடிவெடுப்பது வழக்கம். அவ்வாறு முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் நாம் விவாதித்த செய்திகளையும் விவாதிக்காத செய்திகளையும் பொதுத்தளத்தில் விவாதிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாடுபடுபவர்களே நமது உண்மையான கட்சியின் தொண்டர்களாக இருக்க முடியும் அதுவரை பொதுவெளியில் தங்களது கருத்துக்களை தவிர்ப்பதே கட்சியின் வளர்ச்சிக்கு நலம் பயக்கும் என பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திராவிட கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.
இவரது பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தனித்து முடிவெடுக்க முடியாது என கூறி தனது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இந்நிலையில், கூட்டத்தில் நாம் விவாதித்த செய்திகளையும் விவாதிக்காத செய்திகளையும் பொதுத்தளத்தில் விவாதிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல என கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மூத்த நிர்வாகி கருப்பு முருகானந்தம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தேசபக்தி மிக்க பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு வணக்கம். நமது பாரதிய ஜனதா கட்சியில் முழுமையான கருத்துச் சுதந்திரம் உள்ளது. நம் கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால திட்டங்களுக்கும் அனைத்து நிர்வாகிகளிடமும் விவாதித்து முடிவெடுப்பது வழக்கம். அவ்வாறு முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் நாம் விவாதித்த செய்திகளையும் விவாதிக்காத செய்திகளையும் பொதுத்தளத்தில் விவாதிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
நமது கட்சிக்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கட்சி உரிய நேரத்தில் உரிய முடிவை அறிவிக்கும் அதுவரை கட்சி வளர்ச்சியே நமது குறிக்கோள் என்று செயல்பட்டு 2024 தேர்தல் வெற்றிக்கு பாடுபடுபவர்களே நமது உண்மையான கட்சியின் தொண்டர்களாக இருக்க முடியும் அதுவரை பொதுவெளியில் தங்களது கருத்துக்களை தவிர்ப்பதே கட்சியின் வளர்ச்சிக்கு நலம் பயக்கும்.
நமது கட்சியின் மாநில தலைமையும் தேசிய தலைமையும் கலந்து பேசி கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கும் இதை விடுத்து ஒரு சிலர் கட்சியின் கொள்கைக்களுக்கும் கோட்பாட்டிற்க்கும் முரணாக பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் நமது கட்சியின் உள் விவகாரங்களை பேசி வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்க பட வேண்டும், தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கட்சியின் கண்ணியத்தை காப்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பிரதமர் மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்த உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.