Karunanidhi will speak soon!

திமுக தலைவர் கருணாநிதிக்கு பொருத்தப்பட்டிருந்த ட்ரக்யோஸ்டமி குழாய் அகற்றப்பட்டு சிறிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் விரைவில் தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என்ற உற்காசம் தொண்டர்களிடையே நிலவி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உடல்நலம் காரணமாக கடந்த ஓராண்டாக அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மூச்சுத்திணறல் காரணமாக கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கையாக சுவாசிக்க ட்ரக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால், பேசுவது தடைபட்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டாக கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். தற்போது அவரது உடல் மெல்ல மெல்ல தேறி வரும் நிலையில், முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம் சென்றார். இந்த நிலையில் அவருக்கு பல் மற்றும் கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கருணாநிதி பேசுவதற்கு தடையாக இருப்பது தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்யோஸ்டமி குழாய். இதனை அகற்ற சில மாதங்களுக்கு முன் மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், கருணாநிதிக்கு மீண்டும் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதை அடுத்து மீண்டும் குழாய் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், கருணாநிதியின் உடல் சீரடைந்து வருவதாகவும், அவரது தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த குழாய் அகற்றப்பட்டு சிறிய குழாய் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் பேசும் பயிற்சியும் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் சிறிது நாட்களுக்குள் தொண்டையில் பொறுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் அகற்றப்பட்டு, அதைவிட சிறிய குழாய் பொருத்தப்படும் என்றும், பேச்சுப்பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், திமுக தலைவர் விரைவில் பேசுவார் என்ற உற்சாகத்தில் நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளனர்.