ஒரு வருடத்துக்குப் பின் வெளியில் வந்த கருணாநிதி! கண்காட்சியை கண்டு திரும்பினார்!
சுமார் ஒரு வருட காலத்துக்குப் பின் ஒரு நிகழ்ச்சியைப் பார்வையிட வெளியில் வந்துள்ளார் கருணாநிதி.
சென்னையில் முரசொலி பவள விழா கண்காட்சி அக்.10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க இயலாத வகையில், அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. மருத்துவர்கள் சொல்படி, அவர் எங்கும் வெளியில் செல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று திடீர் விசிட் அடித்தார். கடந்த ஓர் ஆண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார்.
கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார். அவருடன் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர். சுமார் ஓராண்டுக்குப் பிறகு வெளியில் வந்து ஒரு நிகழ்ச்சியைப் பார்வையிட்டுள்ளார் கருணாநிதி. இது திமுக தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பவள விழா கண்காட்சியை பார்வையிட்ட பின் முரசொலி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார் கருணாநிதி.