புதுச்சேரி குறித்து கருணாநிதி குறிப்பிடும் போதெல்லாம் தமிழ்நாடு அடுப்பு என்றால் புதுச்சேரி மாநிலம் கொடி அடுப்பு எனக் குறிப்பிடுவார். புதுச்சேரி மாநிலத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவர் கருணாநிதி. 

தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த நாளை அரசு விழாவாகப் புதுச்சேரியில் கொண்டாட வேண்டும் என முதல்வர் ரங்கசாமிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருணாநிதி பிறந்த நாள்

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த ஆம்நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். புதுச்சேரியிலும் கருணாநிதி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம்.நாக தியாகராஜன், சம்பத் ஆகியோர் இன்று முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “மு.கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அது போல புதுச்சேரி மாநிலத்திலும் கருணாநிதி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அறிவிப்பை வெளியிட வேண்டும்.

புதுச்சேரிக்காகக் குரல் கொடுத்தவர்

புதுச்சேரி குறித்து கருணாநிதி குறிப்பிடும் போதெல்லாம் தமிழ்நாடு அடுப்பு என்றால் புதுச்சேரி மாநிலம் கொடி அடுப்பு எனக் குறிப்பிடுவார். புதுச்சேரி மாநிலத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவர் கருணாநிதி. தானே புயலால் புதுச்சேரி மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமயத்தில், பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு திமுக மூலம் நிவாரண நிதி வழங்கியவர் கருணாநிதி. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் பேசும் போதெல்லாம் புதுச்சேரி மாநிலத்தின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய காரைக்காலுக்கு உரிய பங்கு வந்து சேர வேண்டும் என்பதற்கும் குரல் கொடுத்தவர் கருணாநிதி.

முதல்வருக்கு கோரிக்கை

தமிழகப் பாடநூல்களில் புதுச்சேரி மாநில வரலாற்றையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கான ஒப்புதலை தந்தவர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தச் சூழலில் தமிழக அரசு அறிவித்தது போல, புதுச்சேரி மாநிலத்திலும் கருணாநிதி பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் வகையில் உரிய அறிவிப்பை செய்ய வேண்டும் என காரைக்கால் திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கு ஒரு நட்புப் பாலமாக அமையும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.