கருணாநிதிதான் எனது ஆசிரியர், வழிகாட்டி... ஆசிரியர் தினத்தில் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு..!
ஆசிரியர் தினத்தில், ‘மிக முக்கியமாக எனது வழிகாட்டியும் ஆசிரியருமான கருணாநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்று நடிகை குஷ்புவின் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி பலரும் தங்களுடைய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பகிர்ந்தனர். இதில், பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்புவின் ட்விட்டர் பதிவு கவனித்தக்கதானது. இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மிக முக்கியமாக எனது வழிகாட்டியும் ஆசிரியருமான டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அரசியல் என்பது வெறுப்பும், விரக்தியும் இல்லை, அது நம்பிக்கையும் சேவையும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவர் கலைஞர்தான்”என்று குறிப்பிட்டிருந்தார்.
குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் குஷ்புவின் இந்தப் பதிவை ரீட்வீட் செய்து, ‘கருணாநிதிதான் வழிகாட்டி, ஆசிரியர் என்றால், பாஜகவில் ஏன் இருக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுகவினர் பலரும் குஷ்புவின் ட்விட்டர் பதிவை விமர்சித்து வருகின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த குஷ்பு, சர்ச்சைகள், கருத்து வேறுபாடுகள் காரணமாக 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகினார். பின்பு அவர் காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.