கருணாநிதிக்கு என்னாச்சு ? கோபாலபுரத்துக்கு படையெடுத்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள்….
.திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதையொட்டி துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி , வேலுமணி ஆகியயோர் கோபாலபுரத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி மருத்மதுவமனையில் கருணாநிதி சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் குழு கண்காணித்து வருகிறது. கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதலமைச்ர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நேரில் வருகை தந்தனர்,
அப்போது அவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றோர் கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.
திமுக தலைவர் இல்லத்துக்கு அதிமுக அமைச்சர்கள் நேரடியாக வந்து நலம் விசாரித்தது கோபாலபுரம் இல்லத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,