கர்நாடகா ஜெய்நகர் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை …. விறு விறு என முந்தும் வேட்பாளர் யார் தெரியுமா?
கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் நேற்று முனதினம் நடைப்பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் பேட்பாளர் சௌமியா ரெட்டி 5500 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகுமார் தீவிர பிரச்சாரத்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. குமாராசாமி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மேலும் 25 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் ஜூன் 11-ந் தேதி(நேற்று முன்தினம்) ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டிருந்தார்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி போட்டியிட்டார். . இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. அக்கட்சி காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது.
அதன்படி நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாயின. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜெய்நகர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று . காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி முன்னிலை பெற்று வருகிறார்.
4 ஆவது சுற்ற முடிவில் பாஜக வேட்பாளர் பிரகலாத்தைவிட காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி சுமார் 5500 வாக்குகள் அதிகம் லீடிங்கில் உள்ளார்.. ஓட்டுகள் எண்ணும் பணி மொத்தம் 14 சுற்றுகள் நடைபெற உள்ளது. நண்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்நகர் தொகுதி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக வசம் இருக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையின் அக்கட்சியின் எண்ணிக்கை 105 ஆக உயரும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதன் பலம் 79 ஆக அதிகரிக்கும்.