கர்நாடகா தான் பெரியார் மண்.. தமிழ்நாடு அல்ல..! சர்ச்சை நாயகனின் புது ரிலீஸ்
கர்நாடகாவை வேண்டுமானால் பெரியாரின் மண் என சொல்லி கொள்ளலாமே தவிர தமிழ்நாடு பெரியாரின் மண் அல்ல என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; பெரியாழ்வாரின் மண். தமிழை வளர்த்தது அண்ணா அல்ல; ஆண்டாள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் பேசியிருந்தார். தமிழிசையின் பேச்சுக்கு திராவிடர் கழகத்தின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சர்ச்சை கருத்துக்கு பெயர்போன பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழிசையின் கருத்தை வழிமொழிந்து மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா, தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; பெரியாழ்வாரின் மண் தான். தமிழிசை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதரித்த பூமி தமிழ்நாடு.
தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை படித்தால் பிச்சைக்காரனாக கூட முடியாது, தமிழர்கள் முட்டாள்கள் என்றெல்லாம் ஈ.வெ.ரா பேசியிருப்பதால், தமிழ்நாடு பெரியார் மண் அல்ல. கர்நாடகாவை வேண்டுமானால் பெரியார் மண் என சொல்லி கொள்ளலாம். எனவே தமிழ்நாட்டை பெரியாழ்வார் மண் என தமிழிசை கூறியது சாலப்பொருத்தமானது என எச்.ராஜா தெரிவித்தார்.