திடீரென அதிகரிக்கும் கொரோனா... 24 மணிநேரத்தில் ஊரடங்கை திரும்ப பெற்ற முதல்வர்..!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கை திரும்பப்பெறுவதாக கர்நாடக அரசு திடீரென அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கை திரும்பப்பெறுவதாக கர்நாடக அரசு திடீரென அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாறி அதிக அளவில் பரவத்தொடங்கியது. இதனால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான சேவைக்கு பல நாடுகள் தடைவிதித்துள்ளன.இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாநிலங்கள் இரவு நேர ஊடரங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் நேற்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரவு நேர ஊரடங்கை திரும்பப்பெறுவதாக கர்நாடக அரசு திடீரென அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, இரவு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என்ற பொதுமக்களின் கருத்தை கருத்தில் கொண்டு, இந்த முடிவு பரிசீலிக்கப்பட்டது, அமைச்சரவை சகாக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.