சசிகலாவுக்கு சிறப்பு சலுகை…. சித்தராமையாவை கோர்த்துவிட்ட டிஜிபி சத்ய நாராயண ராவ் !!
முதலமைச்சர் சித்தராமையா கூறியதால் தான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியதாக கர்நாடகா சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்ய நாராயண ராவ் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கூறி சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றச்சாட்டு கூறினார்.
இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க சில பரிந்துரைகளும் அரசுக்கு வழங்கப்பட்டு இருந்தது'
இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுவது குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது குறித்து அரசு உத்தரவின் பேரில் சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் சித்தராமையா கூறியதால்தான், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா மனு செய்து உள்ளார். மேலும் சசிகலாவுக்கு கட்டில், தலையணை போன்ற சலுகைகள் வழங்கியதாக மனுவில் சத்தியநாராயணா தகவல் தெரிவித்து உள்ளார்.