Karnataka Chief Minister Siddaramaiah Dozes Off Again It Was His Party Press Conference
காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனையில் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தராமல், தன் மாநிலம், தன் மக்கள் என விடாப்பிடியாக இருந்தவர் கர்நாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.
தென் மாநிலங்களிலேயே கர்நாடாகாவில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க., கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆடுபுலி ஆட்டத்தை இப்போதே தொடங்கிவிட்டது.

எடியூரப்பா முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்திருப்பது தேர்தலுக்கான முன்னோட்டமே...!
விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள,பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு வியூகங்களை சித்தராமையா தீட்டி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா விலகினாலும், காவிரி விவகாரத்தில் சித்தராமையாவின் நிலைப்பாடு அக்கட்சிக்கு அனுகூலத்தையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் வாய்ந்த பா.ஜ.க.வையே செம அசால்டாக எதிர்கொண்டு வரும் சித்தராமையாவை ஒரு விசயம் மட்டும் தொடர்ந்து துரத்தி இம்சை செய்து வருகிறது.
உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை அறியாமலேயே தூங்கி விடுவது தான் சித்தராமையாவின் பிரச்சனை.

அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி, சட்டமன்றம் வரை சித்தராமையா தூங்கிய நிகழ்வுகள் செய்திகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் தூங்கி விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
கர்நாடாக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சித்தராமையா, சிறிது நேரம் மட்டுமே விழிப்புடன் இருந்தார்.

மாநில பொறுப்பாளர் வேணுகோபால் பேச்சை ஆரம்பித்த 10 ஆவது நிமிடத்திலேயே தூக்கிவிட்டார். இந்நிகழ்வு அம்மாநில நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளானது. பொது இடங்களில் சித்தராமையா தூங்கி வழிவது இது முதல்முறையல்ல. கடந்த 2014 ஜூலையில் சட்டசபையிலும், 2015 ஏப்ரலில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் சித்தராமையா தூங்கி வழிந்தது அங்குள்ள செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
சட்டசபைத் தேர்தலிலாவது கண் உறங்காமல் விழித்துக் கொள்ளுங்கள் சித்தராமையா...
