karate thiyagarajan wishing to jayalalitha
தனது மெயின் பிக்சரை இன்னமும் ஓட்டவில்லை வடகிழக்குப் பருவமழை! ஜஸ்ட், ஃபர்ஸ்ட் லுக்கைத்தான் காட்டியிருக்கிறது. ஆனால் அதற்கே தலைநகர் சென்னை தவித்து தத்த்த்...தளித்திருக்கிறது.
மக்கள் இந்தளவுக்கு மண்டை காய்வதற்கு தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையே காரணம்! என எதிர்கட்சிகள் எட்டு திசையிருந்தும் போட்டுத் தாளிக்கிறார்கள். ஆனால் அமைச்சர்களோ ‘ஆல் இஸ் வெல்’ என்று சிங்கிள் லைனில் சேப்டரை க்ளோஸ் செய்கிறார்கள். ஆனாலும் பொங்கி வழிகிறது எதிர்ப்பு.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், காங்கிரஸின் தென்சென்னை மாவட்ட தலைவருமான கராத்தே தியாகராஜன் எடப்பாடி அரசுக்கு எக்கச்சக்க பஞ்ச்களை கொடுத்து தாக்கியிருக்கிறார் இப்படி...
“தமிழக அரசு ஒரு மோசடியான ஸ்டேட்மெண்டை சொல்லிக் கொண்டிருக்கிறது. 1,200 கிலோமீட்டர் தூரம் மழை நீர் கால்வாய் தூர் வாரப்பட்டதாக சொல்வது பெரும் மோசடி.
முன்னாடியெல்லாம் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட்டு வடிகால் பணி நடக்கும். ஆனால் இப்போது ‘பேக்கேஜ் டெண்டர்’ என்று சொல்லி மொத்த மாநகராட்சிக்கும் சேர்த்து டெண்டர் விடுகிறார்கள். இதில் டோட்டல் காண்ட்ராக்ட் மற்றும் சப் காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாததன் விளைவால் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் மழைக்காலத்தில்.
2002 ஜெயலலில்தா ஆட்சியிலும், 2011-ல் தி.மு.க. ஆட்சியிலும் தூர் வாரப்பட்டது அதன் பிறகு இன்று வரை தூர்வாரவில்லை இதுதான் நிஜம். 2015 வெள்ளத்திலேயே அரசு பாடம் கற்றிருக்க வேண்டும். ஜெயலலிதாவிடம் யாரேனும் புகார்களைக் கொண்டு சென்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். ஆனால் இன்றோ? சொல்ல முடியாதளவுக்கு நிலை மோசம்!ஆயிரத்தெட்டு அவலங்கள் இந்த ஆட்சியில்.
கொடுங்கையூர் மின் விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்ததற்கு மின்வாரிய ஊழியர்களை இடைநீக்கம் செய்தது போதாது. அதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் தங்கமணியே பதவி விலக வேண்டும்.” என்று நறநறத்திருக்கிறார்.
