பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி கொலையில் போலீஸுக்கும் தொடர்பு… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
புதுச்சேரியில் காசுக்கு கொலை செய்யும் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. கூலிப்படைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காசுக்கு கொலை செய்யும் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. கூலிப்படைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் அரசியல் காரணங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததும். பெரும் கலவரம் ஏற்படுவதை தடுக்க காரைக்காலில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தேவமணி உடலை வாங்க மறுத்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக கொலை வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட பின்னர் தேவமணி உடலை பெற்று குடும்பத்தினர் இறுதிச் சடங்கை செய்தனர்.
இந்தநிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று காரைக்காலில் தேவமணி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தேவமணி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்காக அடிமட்ட தொண்டனாக உழைத்தவர் தேவமணி. பல்வேறு மக்கள் போராட்டங்களை நடத்தி வெற்றிபெற்றவர். அவரது கொலையில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது. பெயரளவில் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
தேவமணி கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளிகள் வெளியில் உள்ளனர். இந்த கொலையில் காவலர்கள் சிலர் பின்னணியில் இருக்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது. காவல்துறை உண்மையான விசாரணையை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும. புதுச்சேரியில் கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கொலை குற்றவாளிகளை கண்டறிந்து கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.
தேவமணி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் பாமக சார்பாக தொடர் போராட்டம் நடத்தப்படும். தேவமணி கொலைக்கு நியாயம் க்டைக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளருமான தன்ராஜ் தலைமையில் குழு அமைத்து, புதுச்சேரி மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரை சந்தித்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.