தண்ணீர் இல்லாமல் நெற்பயிரை காக்க முடியாத விவசாயி….. வேதனையில் வெந்து பலியான பரிதாபம்…..
காஞ்சிபுரம் அருகே தண்ணீர் இல்லாமல் 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் காய்ந்து கருகியதால் வேதனையில் வெந்த விவசாயி ஒருவர் திடீரென மாராடைப்பால் மரணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்சந்திரபாபு. விவசாயியான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், 5 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்துள்ளார்.
வட்டிக்கு கடன் வாங்கி இந்த ஏழு ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார். விளைச்சல் அமோகமாக இருந்ததுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த குப்பனுக்கு வந்தது அந்த திடீர் சோதனை. கதிர் நன்றாக வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
போதிய தண்ணீர் இல்லாததால் விவசாய நிலம் வெடித்து ஆங்காங்கே பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பன் சந்திரபாபு சில தினங்க ளாக மன வேதனையில் இருந்துள்ளார். சக விவசாயிகளிடம் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார், கடன் வாங்கி பண்ணிய பயிர்கள் இப்போது வாடுகிறதே எனக் கூறி அவரும் வாடி வந்தார்,
இந்நிலையில், நேற்று காலை திடீரென அய்யோ என் பயிரெல்லாம் போய்விட்டதே என புலம்பியபடி கீழே சாய்ந்து மாரடைப்பால் மரணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் சரியான முறையில் பராமரிக்கமப்படாமலும், தூர்வாரப்படாமல் இருப்பதால் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலையே உள்ளது.
இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஏரிகளை தூர்வார வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி மரணமடைந் துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.