kanimozhi total surrender to m.k.stalin

2ஜி வழக்கின் தீர்ப்பில் விடுதலை கிடைத்ததும் டெல்லி விடுதியில் ‘தமிழகம் சென்று கழகத்தின் எழுச்சிக்காக, வளர்ச்சிக்காக இனி பாடுபடுவதே என் பணி’ என்றார். இதை அந்த நொடியிலேயே ஸ்டாலினின் காதுகளுக்கு கொண்டு சென்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அதில் ஒரு சீனியர் ‘ஏன் தளபதி, அப்படின்னா இப்ப உங்க தலைமையில் கட்சி எழுச்சியாக இல்லாமலா உள்ளது?’ என்று. இது ஸ்டாலினின் மனதில் வடுவாக பதிந்தது. 

இதன் பிறகு கனிமொழிக்கு கண்ணுக்கு தெரியாத கட்டுப்பாடு கட்டைகள் கழகத்தில் தொடர்ந்து விழுந்தன. குறிப்பாக, 2ஜி வழக்கின் வெற்றியை கொண்டாடும் கூட்டங்கள் தமிழகமெங்கும் நடத்தப்பட வாய்மொழி தடை போடப்பட்டது. அதைத்தாண்டி கனிமொழியை அழைத்து அப்படியொரு கூட்டத்தை நடத்திய திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜுக்கு கடும் பரேடு நடத்தப்பட்டது செனடாப் சாலை இல்லத்தில். 

இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் மண்டல மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி பங்கேற்காத நிலையில் தி.மு.க. நடத்தும் முதல் மாநாடு இது.

ஸ்டாலினே முழுக்க முழுக்க தலைவராக முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இதில் கனிமொழி கழகத்தின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக பிரதானப்படுத்தப்பட்டு இருக்கிறாரே சிறப்பு மரியாதையெல்லாம் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், தன் பேச்சில் இந்த ஒதுக்குதல்களை நாசூக்காக கண்டித்து, நறுக், தெறுக்காக பேசி தன் காட்டத்தை வெளிப்படுத்துவார் கனிமொழி என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நடந்ததோ தலைகீழ்! ‘விடுதலை கட்சி துவக்கப்பட்ட போது அதன் தலைவராக பெரியார் முன்னிலைப்படுத்தப்பட்டது போல், இன்று தலைவர் இல்லாத நிலையில் செயல்தலைவரான அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

தமிழகத்தின் ஒரே விடிவெள்ளி, ஒரே நம்பிக்கை அண்ணன் தளபதிதான். சமீபத்தில் பொருளாதார பிரச்னை தொடர்பாக மற்ற மாநில முதல்வர்கள் சிலருக்கு அண்ணன் தளபதி எழுதிய கடிதம் ஒன்று அவ்வளவு முக்கியமானது. இதற்காக நாம் அவரை கொண்டாட வேண்டும். 

நாம் அவரது தலைமையில் கோட்டை நோக்கி முன்னேறி முற்றுகையிடுவோம். கோட்டையில் அண்ணன் கொடியேற்றும் நாள் விரைவில் வருகிறது.” என்றார்.

கனிமொழியின் இந்த தலைகீழ் முடிவு, அவர்களின் அரசியல் வெற்றிக்கு கைகொடுக்கிறதா என்று பார்ப்போம்!