பிளீச்சிங் பவுடர்.. துடைப்பம்… அதிமுக திருடிட்டாங்களாம்… கரிச்சு கொட்டிய கனிமொழி
பிளீச்சிங் பவுடர், துடைப்பம் ஆகியவற்றை கூட கொரோனா காலத்தில் அதிமுகவினர் கொள்ளையடித்தனர் என்று திமுக எம்பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.
நெல்லை: பிளீச்சிங் பவுடர், துடைப்பம் ஆகியவற்றை கூட கொரோனா காலத்தில் அதிமுகவினர் கொள்ளையடித்தனர் என்று திமுக எம்பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.
இப்போது உள்ளாட்சி தேர்தல் சீசன்… படா, படா கட்சிகள் மட்டுமல்ல, அதிரி புதிரியான சின்ன கட்சிகளும், அமைப்புகளும் கூட அரசியல் பேசி அசர வைக்கின்றன. தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் அதே வேளையில் அதிமுக திமுக மீதும், திமுக அதிமுக மீதும் குற்றச்சாட்டும் வைபவம் மட்டும் நிற்கவில்லை.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை திமுக ஒன்றிய வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின் மாநில மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி எப்படி இருந்தது என்று போட்டு தாக்கினார்.
அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலங்கள், ஊடகங்கள், பல்வேறு நாடுகள் உள்பட முதல்வரை பாராட்டுகின்றன. அவரது செயல்களுக்கு வரவேற்பு தெரிவிக்கின்றன
தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மகளிர் முன்னேற்றம் எவ்விதத்திலும் தடைபட்டு விடக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதற்காக தான் நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு பயண கட்டணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சியில் மக்களை பாதுகாக்காமல் துடைப்பம், பிளிச்சிங் பவுடர் வரை கொள்ளை அடிப்பதில் தான் அதிக அக்கறையுடன் இருந்தனர். நேரடி தொடர்பில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல முடியும்.
எனவே தோல்வி என்ற நிலையில்லாது 100 சதவீதம் திமுக வெற்றி பெற அனைத்து தொண்டர்களும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.