kanimozhi condemns central government
நீட் தேர்வில் தொடங்கிய பூகம்பம் தற்போது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் வெடித்திருக்கிறது. கிராமப் புற மாணவர்களின் எதிர்காலம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. சமூக நீதிக்கு அடித்த சாவுமணி என்று நீட் தேர்வை தமிழக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்த்து வருகின்றனர்.
ஒரு படி முன்னே சென்ற திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வு குறித்து மாநிலம் முழுவதும் கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.
இதுவரை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மைக் பிடிக்காத முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, நீட் தேர்வையும் இந்தித் திணிப்பையும் வெளுத்து வாங்கி வருகிறார். வேலூரில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் கருத்தரங்கே அதற்குச் சான்று...
திமுக மாநிலங்களவை குழுத் தலைவரும், எம்.பி.யுமான கனிமொழியும், இதற்கு விதிவிலக்காக என்ன? மத்திய அரசின் நீட் தேர்வுக்கு தொடர்ந்து சிவப்புக் கொடி காட்டி வரும் அவர், இந்த முறை சி.பி.எஸ்.இ. குறித்து சாட்டையை சுழற்றியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. சமச்சீர் பாட கல்விமுறையை கூட தமிழக அரசால் முறையாக அமல்படுத்த முடியவில்லை." என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
