தற்காப்பு முக்கியமில்லை…தன்மானம் தான் முக்கியம்…முரசொலி பவள விழாவில் கமல்ஹாசன் அதிரடி பேச்சு….
முரசொலி பவள விழாவில் கலந்து கொள்வதா ? வேண்டாமா? என கேள்வி எழுந்தபோது, தனக்கு தற்காப்பு முக்கியமில்லை, தன்மானம் தான் முக்கியம் என்று நினைத்து விழாவில் பங்கேற்றதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.
கடந்த 1942ம் ஆண்டு, திமுக தலைவர் கருணாநிதியால் துண்டறிக்கையாக தொடங்கப்பட்ட முரசொலி, இதையடுத்து 1948ஆம் ஆண்டு வார இதழாக மாறியது.
பின்னர் 1960ம் ஆண்டில் இருந்து நாளிதழாக , இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் முரசொலியின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசன், தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது பேசிய நடிகர் கமல்ஹாசன், நீரின்றி அமையாது உலகு என்று தொடங்கி, நீங்கள் அனைவரும் இருப்பதால் தான், என் தலை தயக்கமின்றி இங்கு தலை வணங்குவதாக கூறினார்.
நான் சிவாஜிக்கு வசனம் எழுதும் காலத்தில் இருந்து கருணாநிதியின் ரசிகனாக இருந்து கொண்டு இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இந்த விவிக்கு ரஜினி வருகிறாரா இல்லையா என்று நான் கேள்வி கேட்டபோது, அவர் வருகிறார். ஆனால், பேசவில்லை என்று எனக்கு பதில் வந்தது. ரஜினி வந்தால் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு அவருக்கருகில் பாதுகாப்பாக அமர்ந்து கொள்ளலாமே என்று தான் முதலில்நினைத்தேன்.
அதன் பிறகு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். தற்காப்பு முக்கியமில்லை, தன்மானம் தான் முக்கியம். ஏனென்றால், இந்த மேடையில், பெரிய பத்திரிக்கை ஆசிரியருடன், பாதியில் பத்திரிக்கையை நிறுத்திய ஒரு கடைநிலை ஆசிரியனாக இந்த மேடையில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று கமலஹாசன் பேசினார்.