Kamal Talks about Rajini Political Entry

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி, வயது முதிர்வு காரணமாக தற்காலிக ஓய்வெடுத்து வருகிறார். உடல்நலக் காரணமாக ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் நடிகர் கமல் ஹாசன், சமூகம் குறித்து பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். கமல் விரைவில் அரசியலுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், தற்போது ரஜினி பேரவை என்ற வலைத்தளத்தை துவக்க ரசிகர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். அவ்வாறே வலைத்தளமும் துவக்கப்பட்டு, ரசிகர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த வலைத்தளத்தின் வழியே பொதுமக்கள் தாங்களும், ரஜினி பேரவையின் உறுப்பினராக முடியும். இத்தகைய முயற்சியின் மூலம் தனது அரசியல் தளத்தின் மூலம் தனது முதல் படியினை நடிகர் ரஜினி துவக்கியுள்ளார்.

இந்த நிலையில், மலேசியாவில் நட்சத்திர கலைவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. அரசியல் பிரவேசம் குறித்து கமலும், ரஜினியும் கூறியுள்ள நிலையில், இவர்கள் இருவருமே இந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில், நடிகர்கள் பலர் பேசினர். நடிகர் கமல் ஹாசனின் பேச்சை, ரஜினி ஆர்வத்தோடு ரசித்து கேட்டார். இதன் பின்பு கமலிடம், சிலர் கேள்விகள் கேட்டனர். அப்போது ஒருவர், உங்கள் படங்களில் வந்த வசனங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த கமல், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். நான் எழுதி, சிவாஜி சார் பேசிய, வெத நான் போட்டது, வசனம்தான் என அழுத்தமாக சொல்லியிருக்கிறார் கமல். கமலின் இந்த பேச்சை ரசித்து கேட்ட ரஜினியோ, கமலை கட்டிப்பிடித்து வெல்டன் எனவும் பாராட்டியுள்ளாராம்.