கழகங்களைப் போல் களம் இறங்கிய கமல்ஹாசன் கட்சி…. அதிரடி தொடக்கம் !!
திமுக, அதிமுகவைப் போல மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சமூக ஊடக பிரிவு தொடங்கப்பட்டு அதற்கு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2 பெரிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தனித்தனியாக சமூக ஊடக பிரிவுகள் இயங்கி வருகின்றன. ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக சமூக ஊடகமான டுவிட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு தான் கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழைந்தார்.
தற்போது மக்கள் நீதி மய்யத்தின் கட்சி சார்பிலும் சமூக ஊடக பிரிவு தொடங்கப்பட்டு அதற்கு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக இன்று செய்திகள் உடனுக்குடன் அவரவர் கையடக்க தொலைபேசியில் கிடைத்து விடுகிறது.
உலகம் முழுவதும் இன்று சமூக ஊடகங்களின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் அரசியல் மாற்றங்களும், சமூக மாற்றங்களும் ஏற்பட இன்று சமூக ஊடகங்களின் பங்கு அவசியமானது.
நமது கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவின் பங்கு மிக வீரியமாக செயல்பட்டு கொண்டு வருகிறது என்பதை நான் அறிவேன்.
2021 நமது தேர்தல் பணிகளில், தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் பங்கு மிக முக்கியமானது. எனவே நமது கட்சியும் இப்பிரிவுகளை வலிமைப்படுத்த புதிய பொறுப்புகளை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
.
கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், பிற சார்பு அணிகளும், தொண்டர்களும் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவிற்கு ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.