Kamal Dinakaran Party is committed
மக்கள் நலன் காக்கும் வகையில், எதிர்காலத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இணைந்து செயல்பட்டால் வியப்பில்லை என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதியன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ’காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக, அதன் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பாமகவின் சார்பாக அன்புமணி, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆண்டிப்பட்டியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு ஆண்டிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தங்க.தமிழ்செல்வன் அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “மக்கள் நீதி மய்யம் சார்பாக, கமல்ஹாசன் நடத்திய விவசாயிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் அமமுக பங்கேற்றது. ஆனால், இந்த கூட்டணி தொடருமா என்று இப்போது சொல்ல முடியாது. எதிர்காலத்தில், மக்கள் நலன் காக்கும், விவசாயிகளைப் பாதுகாக்கும் கூட்டணியில் நாங்கள் ஒன்றாக இணைந்தால் ஆச்சர்யமில்லை” என்று அவர் கூறினார்.
