கமல் பிரச்சார கூட்டத்தில் செருப்பு, முட்டை வீச்சு... பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு..!
கரூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால் 2 நாள் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி உள்ள வேலாயுதம்பாளையத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டது. மேலும் முட்டையும் வீசப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புடன் காரில் புறப்பட்டு சென்றார்.
இந்த தாக்குதலை கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பாஜகவின் கரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.