சிறுமிகள் உயிரிழப்பு எதிரொலி..! பழனிசாமி அரசு மீது கமல், தினகரன் பாய்ச்சல்..!
சென்னை கொடுங்கையூரில் அறுந்துகிடந்த மின்கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ந்து 2 சிறுமிகள் உயிரிழந்தனர். இனியாவது இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கமல்ஹாசன், தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில், வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்ற சிறுமிகள் மின்பெட்டியிலிருந்து வெளிவந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தனர்.
சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொடுங்கையூரில் உயிரிழந்த குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு நிதியுதவியும் அனுதாபமும் போதாது என்றும் இனியும் இதுபோன்றதொரு நிகழ்வு நடந்துவிடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தினகரனும் அதே கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இனியாவது அரசு விழித்துக்கொண்டு செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.