Kamal - Rajini meet is build by people blame minister Jayakumar
கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்டது என்னவோ ரூஸ்வெல்டும்- வின்ஸ்டன் சர்ச்சிலும் சந்தித்துக் கொண்டதைப் போல பில்டப் செய்யப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அறிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார், புதிய கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இதே போல் நடிகர் கமலஹாசன் வரும் 21 ஆம் தேதி தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து, தொடங்கும் கமல்ஹாசன், அன்று மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கிறார்.
அதற்கு முன்னதாக கமலஹாசன் முக்கிய தலைவர்களை, சந்தித்துப் பேசி வருகிறார். முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்தித்த கமல்ஹாசன், தனக்கு பிடித்த தலைவர்ளை சந்தித்து அரசியல் பயணம் குறித்து பேசி வருவதாகவும் அவர்களிடம் ஆசி பெற்று வருவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் போயஸ் தோட்டத்துக்குச் சென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். கமல் –ரஜினி சந்திப்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ் தாத்தா உ.கே.சாமிநாதையரின் 164 ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்ட்டது. இதையடுத்து அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், மாஃபா பாணடியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்டது என்னவோ ரூஸ்வெல்டும்- வின்ஸ்டன் சர்ச்சிலும் சந்தித்துக் கொண்டதைப் போல பில்டப் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதால் புதிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
