ஐந்து வருஷம் ஆளுநர்... பதவி முடிஞ்சவுடன் பாஜக உறுப்பினர்... தமிழிசைக்கும் வாய்ப்பு இருக்கே!
இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். அரசியலில் அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்பு இருந்தும், அவரை ஆளுநராக்கி அரசியலிலிருந்து ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது.
ஐந்து ஆண்டுகள் ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பதவியில் இருந்தார் கல்யாண் சிங். உ.பி. முன்னாள் முதல்வரான இவரை, கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பதவியேற்றவுடன், ராஜஸ்தான் மா நில ஆளு நராக நியமித்தார். கடந்த ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். ஆளுநர் அரசியல் ஈடுபாடு காட்டக் கூடாது என்ற விதியை மீறி அரசியல் பேசினார்.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுநராக இருந்த கல்யாண் சிங்கின் பதவிக்காலம் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து மீண்டும் உ.பி. மாநில அரசியலுக்கு திரும்ப கல்யாண் சிங் முடிவு செய்தார். தற்போது பாஜகவில் 75 வயதைத் தாண்டியவர்களுக்கு கட்சி பதவியும் ஆட்சியில் பதவியும் வழங்குவதில்லை. இருந்தபோதும் 87 வயதான கல்யாண் சிங், நேற்று முறைப்படி பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். அரசியலில் அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்பு இருந்தும், அவரை ஆளுநராக்கி அரசியலிலிருந்து ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. ஆனால், தன்னுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்று தமிழிசை அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
தற்போது ஆளுநர் பதவி முடிந்தவுடன் மீண்டும் அரசியலுக்கு கல்யாண் சிங் திரும்பியிருப்பதன் மூலம், தெலங்கானா ஆளுநர் பதவிக் காலம் முடிந்தவுடன் 63 வயதில் தமிழிசையும் தமிழக அரசியலுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை போலவே காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் ஆளுநராகப் பதவி வகித்தவர்கள் தீவிர அரசியலுக்கு திரும்பிய கதை ஏராளம் உண்டு.