யாகம் நடத்தினால் தான் மழை வரும் என்றால் ஒரு பூசாரியை முதல்வராக்கலாமே... எடப்பாடியை வெறுப்பேற்றும் திமுக எம்.பி..!
யாகம் செய்து தண்ணீர் சிக்கலை போக்கிடலாம் என்றால் பூசாரியையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கலாமே என மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி விமர்சனம் செய்துள்ளார்.
யாகம் செய்து தண்ணீர் சிக்கலை போக்கிடலாம் என்றால் பூசாரியையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கலாமே என மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் குடிநீருக்காக தெருத் தெருவாக அலைகின்றனர். பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மழை வேண்டி அதிமுக சார்பாக முக்கியக் கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, பல்வேறு கோயில்களில் அமைச்சர்கள் யாகம் நடத்தி வருகின்றனர். மறுபுறம் எதிர்க்கட்சியான திமுக சார்பாக தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இதன் ஒரு பகுதியாக வடசென்னை பகுதியில் திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்;-தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் குறித்து ஆளும் அதிமுக அரசு தெரிந்துகொள்ளவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தண்ணீர் பஞ்சம் காரணமாக ஓட்டல்கள், ஐ.டி. நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் பூட்டப்பட்டுள்ளன. ஆனால், முதல்வர், அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் இல்லை எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார். அதேபோல், முக்கியக் கோயில்களில் அதிமுக மாவட்ட செயலாளர்களை யாகம் நடத்தும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். யாகம் செய்து தண்ணீர் சிக்கலை போக்கிடலாம் என்றால் பூசாரியையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கலாமே என கலாநிதி வீராசாமி விமர்சனம் செய்துள்ளார்.