"ஆர்.கே.நகர் இடைதேர்தலில் சசிகலா படத்தை திமுகவினர் கிழித்ததால் பயன்படுத்தவில்லை" - கலைராஜனின் வினோத விளக்கம்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தை திமுக வினர் கிழிகத்து எறிகிறார்கள் என்பதற்காகத்தான் அவரின் படத்தை பிரச்சாரத்தின் போது நாங்கள் பயன்படுத்தவில்லை என டி.டி.வி தினகரனின் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் புது விளக்கமளித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது. அதிமுக எங்களுக்குத் தான் சொந்தம் என்ற பஞ்சாயத்தை சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு போயினர்.
ஆனால் தேர்தல் ஆணையமோ இரட்டை இலை சின்னத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல், கட்சியின் பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என அறிவித்தது.
இதையடுத்து சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நடைபெற்ற தேர்தல பிரச்சாரத்தின் போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் பெயரை யாருமே பயன்படுத்தவில்லை.
பின்னர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ முருகுமாறன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலாவின் படத்தை ஏன் பயன்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தி.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், தினகரன் ஆதரவு எம்எல்ஏவுமான கலைராஜன், நாங்கள் சின்னம்மா மீது உயிரையே வைத்திருக்கிறோம். அவரது படத்தை பயன்படுத்தும்போது சில நேரங்களில் திமுகவினர் சசிகலா படத்தை கிழித்து எறிந்து விடுகிறார்கள், எனவேதான் அவர் படத்தை பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டார்.
அது போன்று நடந்தால் அது சசிகலாவை கொச்சைப்படுத்துவது போல ஆகிவிடும் என்றும் அவருக்கென இருக்கும் மரியாதையை காப்பாற்றவே அவரின் படத்தை இடைத் தேர்தலில் நாங்கள் பயன்படுத்தவில்லை என புது வகை விளக்கம் அளித்தார்.