டெல்லி நடந்ததை நடித்து கட்டிய துரை:- நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட கருணாநிதி!
கோபாலபுரத்தில் இன்னும் 2ஜி தீர்ப்பு கொண்டாட்டங்கள் அடங்கவில்லை. குதூகலமும், களிப்புமாக தருணங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
2ஜி தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று கனிமொழியுடன் ராஜாத்தியம்மாளும் டெல்லி சென்றிருந்தார். ஆனால் ஸ்டாலின் சென்னையில்தான் இருந்தார். அங்கே நடக்கும் விஷயங்களை ஸ்டாலினுக்கு லைவ் வாக ரிலே செய்வதற்காக ஒரு கெத்தான யூனிட் ஒன்று போயிருந்தது. ஜெகத்ரட்சகன், பொன்முடி என்று கெத்தான அந்த யூனிட்டின் தளபதி துரைமுருகன் தான். ஏற்கனவே துரைக்கு சற்று மூச்சு திணறல் பிரச்னை உண்டு. இதில் டெல்லியின் மூடுபனி வேறு படுத்தியெடுத்தது.
ஆனாலும் கழகத்தின் எதிர்காலம் பற்றிய தீர்ப்பு என்பதால் தில்லாக பனியிலிறங்கி பாட்டியாலா கோர்ட் சென்றார். எல்லாவற்றையும் கவனித்தார், எல்லாரையும் கவனித்தார். அவ்வப்போது ஸ்டாலினுக்கு தகவல்களை பரிமாறிக் கொண்டுமிருந்தார். துரை முருகனின் உத்தரவுப்படி அவரது உதவியாளர் ஒருவர் அங்கே நடப்பவைகளை வீடியோ செய்து கொடுக்க அவை ஸ்டாலினின் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பப்பட்டன. இதை நமது ஏஸியா நெட் தமிழ் இணையதளம் அன்றே பிரத்யேகமான செய்தியாக தந்திருந்தது.
இந்நிலையில் தீர்ப்பு தி.மு.க.வுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில், சென்னை திரும்பிய துரைமுருகன் கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தார். அப்போது கருணாநிதியிடம் டெல்லியில் நடந்தவைகளை அப்படியே நடித்துக் காட்டினார். நீதிபதி ஷைனி தீர்ப்பை வாசித்ததும் ஆ.ராசா அவரை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி கண்ணீர் மல்க கும்பிட்டது, கனிமொழியை ஆரத்தழுவி ராஜாத்தியம்மாள் முத்தமிட்டு அழுதது என எல்லாவற்றையுமே அபிநயங்களால் செய்து காட்டினார். கருணாநிதியின் கவனம் சிதறுகையில் அவரது கன்னத்தை தொட்டு திருப்பி கவனிக்க வைத்தார்.
துரைமுருகன் அருமையான நடிகர். சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யும் சமயங்களில் சில நேரம் தி.மு.க.வே வெளியிலமர்ந்து சட்டமன்ற நடவடிக்கைகளை நடித்துக் காட்டும். அப்போது அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் போ துரைமுருகன் நடித்துக் காட்ட அந்த ஏரியாவே ஆனந்தத்தில் அல்லு தெறிக்கும். பந்தோபஸ்துக்கு வந்த போலீஸ்காரர்கள் கூட துரையின் நடிப்பை பார்க்க போட்டிபோட்டு கூடுவார்கள்.
அப்பேர்ப்பட்ட துரைமுருகன் கோபாலபுர இல்லத்தில் கருணாநிதி முன் டெல்லி நிகழ்வுகளை அபிநயத்துக் காட்ட, அதை கண்டு நெகிழ்ச்சி கண்ணீர் வடித்திருக்கிறார் கருணாநிதி.