தமிழகத்தில் நுழைய முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ்..! பெரியார் கொள்கை இருக்கும் வரை பாஜக கால் ஊண்ட முடியாது-கி.வீரமணி
பெரியார் கொள்கை இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவால் வளர முடியாது.ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என சொல்பவர்கள் ஒரே ஜாதி எனக்கூற தயாரா. அவ்வாறு அறிவித்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் என கி.வீரமணி தெரிவித்தார்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில்,காங்கிரஸ் கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், திமுக சார்பாக கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த 8பக்தர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கீ.வீரமணி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மேடையில் இருந்த அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
சாலை விபத்தில் உயிரிழந்த சபரிமலை பக்தர்கள்..! நிவாரணம் நிதி அறிவித்த முதலமைச்சர்
இதனை தொடர்ந்து பேசிய திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, கடவுள் மறுப்பாளர்களான நாங்கள் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மரணத்திற்கு ஏன் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நாங்கள் சொல்வது பெரியார் சொன்னது போல கடவுளை மறு! மனிதனை நினை! என்பது தான்.என்னை பொறுத்தவரை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்வது மூடநம்பிக்கை, ஆனால் அவர்களுக்கு அது பக்தி. இது போன்று கோவிலுக்கு சென்று வந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி யார் உயிரிழந்தாலும் பக்தரோ, ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜகவினர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் மனிதன் என்கிற அடிப்படையில் என்று கூறினார்.
19 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் தகவல்
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் எல்லாம் கடிகாரத்தில் உள்ள நேரத்தை கண்டு அஞ்சி அதற்கு ஏற்றாற்போல ஓட வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறோம். சிலரை போல் கட்டிய கடிகாரத்தின் வரலாற்று தாட்பரியத்திற்கு பயப்படுவார்கள் அல்ல என்றார். இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு காவல்துறையினர் தயங்கினர். ஏனெனில் ஏதாவது விபரீதமாக பேசுவார்கள் என்ற அச்சத்தில். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது இன்னும் ஒரு சில காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை போலும். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
எங்களிடம் இருக்கின்ற அறிவுக் கடப்பாரை சானாதனத்தை தான் உடைத்து எறியும். இதனால் அரிசனரும் அரசாங்கத்தின் அரசனாக ஆக முடியும். கடவுள் இல்லை என்று சொல்லி வரும் எங்களால் எந்த ஒரு கோயிலோ வழிபாட்டு தலங்களோ உடைக்கப்பட்டது உண்டா. ஆனால் உங்கள் வரலாறு தடை செய்யப்பட்ட வரலாறு. இந்தியாவில் 3முறை தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற பெயர் பெற்றது தான் ஆர்.எஸ்.எஸ். வித்தைகளால் மீண்டும் வருகிறது. ஆனால் விரைவில் அது முற்று பெரும் என்றார்.
இன்றைக்கு இந்திவாவிற்கே திராவிட மாடல் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் சிலருக்கு திராவிட மாடல் புரியவில்லை பிடிக்க வில்லை என்கின்றனர். உள்ளத்தால் அனைவரும் ஒன்று சமூக நீதி, சனாதனத்திற்கு எதிரானது என்பது தான் திராவிட மாடல் ஆகும். அதைத் தான் தந்தை பெரியார் கூறி வந்தார். பெரியாரை நேரில் காணாத இன்றைய இளைஞர்கள் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் மற்றும் அவரது சிந்தனைகளை தாண்டி இங்கு ஆட்சி நடைபெற முடியாது என்பதற்கு உதாரணம் தான் பிராமணர்களாக இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்ம ராவ், ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஆகியோரால் 69சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது ஆகும். நீங்கள் எந்த ரூபத்தில் வந்து கபளிகரம் செய்தாலும் அங்கு பெரியார் கொள்கை தான் வெல்லும். இவ்வாறு அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி, திராவிட மாடல் ஆகும். ராகுல் காந்தி சொன்னது போல் பெரியார் கொள்கை இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவால் வளர முடியாது.ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என சொல்பவர்கள் ஒரே ஜாதி எனக்கூற தயாரா. அவ்வாறு அறிவித்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் என கி.வீரமணி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! சிகிச்சைக்காக நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி