தற்போது தமிழகத்தில் விடியல் ஏற்பட்டிருக்கிறது. தவறு நடக்கும் இடத்துக்கெல்லாம் தமிழக முதல்வர் செல்கிறார். தவறானவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்கின்றன.

பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல இனி நாட்டில் இருந்து பாஜக அகற்றப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

கே.எஸ். அழகிரி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான ஒரு தலைவர் ராகுல் காந்தி. பிரதமர் மோடி புதிய வேளான் சட்டத்தை கொண்டு வந்தபோது மதுரைக்கு வந்த ராகுல் காந்தி சொன்னார். இன்னும் ஓராண்டில் இந்த மோடி அரசாங்கம் வேளான் சட்டத்தை திரும்பப்பெறும் என்று கூறினார். அதுபோலவே நடந்துள்ளது. மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சரி, கலாசாரம் சரி சீரழிந்துள்ளது. இதையெல்லாம் சரி செய்யும் ஆற்றல் ராகுல் காந்திக்கே உள்ளது. 

தற்போது தமிழகத்தில் விடியல் ஏற்பட்டிருக்கிறது. தவறு நடக்கும் இடத்துக்கெல்லாம் தமிழக முதல்வர் செல்கிறார். தவறானவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்கின்றன. சொந்த கட்சிக்காரர்கள் தவறு செய்தால்கூட கண்டிக்கப்படுகிறார்கள். இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவிலேயே மாடலாகத் தமிழகம் திகழ்ந்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு மேலும் பல சீர்திருத்தங்கள் வேண்டும். விவசாயம் , தொழில், கல்வி போன்ற துறைகளில் இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. ஏலகிரியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாம் ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த முகாம் நடக்கும். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதற்கு மீண்டும் பொது முடக்கம் என்பது தேவையற்ற ஒன்று. பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்ற கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும். பா.ஜ.க என்பது ஒரு காற்றடைத்த பலூன்; அது எப்போது வேண்டுமானலும் வெடிக்கும். பாஜகவினர் ஒரு கற்பனை கதை. பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல இனி நாட்டில் இருந்து பாஜக அகற்றப்படும்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.