கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி.. மோடி ஆட்சியில், ED-யின் லட்சணம் பாரீர்! பாலகிருஷ்ணன் விளாசல்!
ஊழல்வாதிகளை தப்ப விடுவதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பாஜகவை சார்ந்த நபர்கள் மத்திய முகமைகளின் பேரால் லஞ்சம் வாங்குவது, பாஜகவினர் வீட்டில் சோதனைக்கு சென்றுவிட்டு கட்சியினர் தலையீட்டுக்கு பணிந்து திரும்பி வருவது என அடுக்கடுக்கான முறைகேடுகளை பார்த்து வருகிறோம்.
![k balakrishnan slams Modi Government tvk k balakrishnan slams Modi Government tvk](https://static-ai.asianetnews.com/images/01gawkvmcaxyj3vf6z8jvw121j/k-balakrishnan_363x203xt.jpg)
பிரதமர் மோடியின் ஆட்சியில், ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டுள்ளார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அங்கித் திவாரி என்பவர் மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ரூ.31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ரூ. 20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இதுபோல வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கெல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும்.
அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு செய்துள்ளனர். இது அவசியமான நடவடிக்கை. சில நாட்கள் முன்புதான் ராஜஸ்தானில் இதே போல ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார். ஏற்கனவே, ஊழல்வாதிகளை தப்ப விடுவதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பாஜகவை சார்ந்த நபர்கள் மத்திய முகமைகளின் பேரால் லஞ்சம் வாங்குவது, பாஜகவினர் வீட்டில் சோதனைக்கு சென்றுவிட்டு கட்சியினர் தலையீட்டுக்கு பணிந்து திரும்பி வருவது என அடுக்கடுக்கான முறைகேடுகளை பார்த்து வருகிறோம்.
பிரதமர் மோடியின் ஆட்சியில், ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன. அதற்காகவே வானளாவிய அதிகாரங்களை அந்த முகமைகளிடம் குவிக்கப்பட்டன. இப்போது, மோடி ஆட்சியின் ஊழல் முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி கேடுகெட்ட நிலைமைக்கு ஆளாகிவிட்டுள்ளன என கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.