மு.க.ஸ்டாலின் மூலம் அடித்தளம் போடும் ஜோதிமணி... கைகொடுக்குமா சிபாரி..?
செந்தில் பாலாஜி மூலம் மு.க.ஸ்டாலினை வைத்தும் காங்கிரஸ் தலைமையிடம் இது குறித்து சிபாரிசு செய்யச் சொல்லி இருப்பதாகவும் தகவல்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கடந்த சில காலமாக, அனுதினமும் ஏதாவது ஒரு அமைச்சரைச் சந்தித்து தன்னுடைய தொகுதிக்கான குறைகளை நிவர்த்தி செய்யக் கோருவது, தொகுதிக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருமாறு கேட்பது என்று ஏதாவது ஒருவிதத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது தவிர, அரசியல் சர்ச்சைகள் தொடர்பாக தனது அதிரடி கருத்தைப் பதிவுசெய்தும் கவனம் ஈர்த்துவருகிறார். இப்படி அவர் பரபரப்பாக இயங்குவதன் பின்னணி, அவருக்குள் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கனவு என்கிறார்கள்.
இதற்காக ஜோதிமணி பல வகைகளில் முட்டி மோதி வருகிறார். செந்தில் பாலாஜி மூலம் மு.க.ஸ்டாலினை வைத்தும் காங்கிரஸ் தலைமையிடம் இது குறித்து சிபாரிசு செய்யச் சொல்லி இருப்பதாகவும் தகவல். ஆகையால்தான், பாஜக மாநிலப் பொதுச்செயலராக இருந்த கே.டி. ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் மீதும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மற்ற பாஜகவினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவைச் சந்தித்து மனு அளித்தார் ஜோதிமணி.
அந்தப் பிரச்சினை தொடர்பாக ஊடக விவாதங்களில் கலந்துகொண்டும் பேசினார். சமூக வலைதளங்களிலும் கடுமையான கருத்துகளைப் பதிவுசெய்தார். இப்படி லைம் லைட்டிலேயே இருந்தால் காங்கிரஸ் தலைமை தன்னைக் கவனிக்கும் என அவர் எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள்.