ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது ஏன் தீர்ப்பு சொல்லவில்லை ? சர்ச்சையைக் கிளப்பும் நீதிபதி செல்லமேஸ்வர் !!
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு ஓர் ஆண்டுக்குப் பிறகு அதுவும் அவர் இறந்த பிறகு தீர்ப்பு சொன்னதற்கு என்ன காரணம் என்பது குறித்த உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமான வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக அப்போது நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீதிபதி செல்லமேஸ்வர், அளித்த பேட்டியில், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தனக்கு சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டார்.
அதற்கு உதாரணமாக ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, இளைய நீதிபதிகளை கொண்ட அமர்வு என்றும் இதை தான் அப்போதே எதிர்த்ததாகவும் செல்லமேஸ்வர் தெரிவித்தார்.
ஆனால் ஜெயலலிதா வழக்கை அந்த அமர்வே விசாரித்தது என்றும், தீர்ப்பு ரெடியாகி ஒரு ஆண்டுக்கு பிறகே அந்த அமர்வு தீர்ப்பு கூறியது என்றும் கூறினார்.
ஜெயலலிதா இறந்த பிறகு தீர்ப்பு சொல்வதால் என்ன பிரயோஜனம் என்றும் செல்லமேஸ்வர் கேள்வி எழுப்பினார்.
விசாரணைக்காக வழக்கு களை அமர்வுகளுக்கு ஒதுக்குவது குறித்த அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருப்பதால், அவர் அந்த அதிகாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் வழக்குகள் ஒதுக்கப்பட்டால், அது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை பாதிப்பதாக அமைந்து விடும் என்றும் அவர் கூறினார்.
தலைமை நீதிபதி மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது பற்றியும், பின்னர் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது பற்றியும் நீதிபதி செல்லமேஸ்வரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நமது நீதித்துறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வது அவசியம் என்றும், நீதித்துறையில் எழுப்பப்படும் கேள்விகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் கண்டன தீர்மானம் கொண்டு வருவது தீர்வாக அமையாது என்றும் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், வருகிற ஜூன் 22-ந் தேதி தான் ஓய்வுபெற இருப்பதாகவும், அதன்பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த பதவியையும் தான் எதிர்பார்க்கப்போவது இல்லை என்றும் செல்லமேஸ்வர் கூறினார்.