தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளார். 

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா தொற்றை புதிதாக பொறுப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக கையாண்டது என பலரும் பாராட்டி வருகின்றனர். முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. தற்போது கருப்பு பூஞ்சை தொற்றைக் கணிசமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி பயணிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது நீட் தேர்வு, மத்திய அரசுவழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள போதும் கரும்பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அதற்கான மருந்தை அதிகரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை வழங்குவது தொடர்பாகவும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசுக்கு நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாகவும் ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களை வலியுறுத்தியிருந்த நிலையில், பிரதமரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். இதற்காக பிரதமரிடம் ஜூன் 16 அல்லது 17ம் தேதி நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 17ம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாகவும், இதற்கு தேவையான கோரிக்கைகள் மனுக்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.