மீண்டும் விசாரணை வளையத்துக்குள் சிக்கும் ஷீலா பாலகிருஷ்ணன்! நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் சம்மன்!
முன்னாள் தலைமை செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து தமிழக அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது.
இந்த ஆணையம் முன்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமிக்கும் விசாரணை ஆணையம் இரு தினங்களுக்கு முன்பாக சம்மன் அனுப்பியது. ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் தலைமை செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த டிசம்பர் 20 ஆம், ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், வரும் 11 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.