ரிபப்ளிக் டிவி மைக்கை எடுன்னார்... நீங்க குஜராத்துக்கே போலாம்னு ஜிக்னேஷை நிருபர்கள் புறக்கணித்தனர்....
தமிழகம் வந்திருக்கிறார் குஜராத் மாநில எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி. இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் இருந்த ரிபப்ளிக் டிவி மைக்கை எடுக்கச் சொன்னார் ஜிக்னேஷ். அதை முடியாது என்று சொல்லி ஒட்டுமொத்தமாக செய்தியாளர்கள் சந்திப்பையே புறக்கணித்தனர் நிருபர்கள்.
சென்னையில் நடந்த சுவாரஸ்யம் இது. குஜராத் மாநிலம் வட்கம் தொகுதியின் எம்எல்ஏ.,வாக தேர்வாகியிருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. இவர், குஜராத்தில் ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி, அரசியல் செய்துகொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராக குஜராத்தில் காங்கிரஸால் முன் நிறுத்தப் பட்டுள்ள தலித் அமைப்பின் தலைவர் இவர்.
வெற்றி பெற்று வந்த கையோடு, சென்னையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். நேற்று அவர் சந்தித்த நபர்கள், கூட்டம் இவற்றை எல்லாம் ஊடகங்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின. சாதாரண சந்திப்பையும் கூட முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தன.
இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானியுடன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு வந்த மேவானி, தன் முன்னர் ரிபப்ளிக் டிவியின் ‛மைக்' வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். ஏற்கெனவே ரிபப்ளிக் டிவி மீது கடுங் கோபத்தில் இருக்கும் காங்கிரஸ், மற்றும் அதனைச் சார்ந்த ஜிக்னேஷ் மேவானி, அந்த ஒரு டிவி மைக்கை மட்டும் எடுத்துவிட வேண்டும் என்றார். ஆனால் எல்லோரும் தயங்கினர். அப்படி என்றால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என்றார் ஜிக்னேஷ்.
இந்த மிரட்டலைக் கண்டு செய்தியாளர்கள் நகைத்தனர். இளைஞராக களத்தில் வந்துள்ள நபர் என்பதால், பொறுமையுடன் அணுகிப் பார்த்தனர். ஆனால் ஜிக்னேஷ் அந்த ஒரு மைக்கை எடுத்தால்தான் பேட்டி என்று அடம் பிடித்தார்.
அப்படி என்றால் இந்த செய்தியாளர் சந்திப்பையே நாங்கள் புறக்கணிக்கிறோம். அப்படி எல்லாம் ஒரு குறிப்பிட்ட மைக்கை மட்டும் எடுக்க வேண்டும் என நீங்கள் எங்களை நிர்பந்திக்க முடியாது எனக்கூறிய செய்தியாளர்கள், அந்த சந்திப்பைப் புறக்கணித்து வெளியேறினர். இதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு ரத்தானது. செய்தியாளர்களிடம் பாகுபாடும் கட்சி பேதமும் பார்க்கும் நிலைக்கு வளரும் தலைமுறை அரசியல்வாதிகள் மாறியிருப்பது கண்டு செய்தியாளர்கள் வருத்தப் பட்டுக் கொண்டே சென்றனர்.