அமைச்சரை அலறவிடும் தினகரன்... தாய்மாமனை எதிர்த்து அக்கா மகன் போட்டி.. ஜோராகும் ஜோலார்பேட்டை தொகுதி..!
ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு எதிராக அவரது அக்காள் மகன் அமமுக சார்பில் போட்டியிடுவதால் தேர்தல் சூடுபிடித்துள்ளது.
ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு எதிராக அவரது அக்காள் மகன் அமமுக சார்பில் போட்டியிடுவதால் தேர்தல் சூடுபிடித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சட்டமன்ற தொகுதி, கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை தொகுதியாக உருவானது. ஜோலார்பேட்டை தொகுதியில் முதல் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவில் போட்டியிட்ட கே.சி.வீரமணி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இதையடுத்து 2016ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக உள்ளார். தொடர்ந்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் 3வது முறையாக அதிமுக சார்பில் ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளராக தேவராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அமமுகவின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளராக தென்னரசு சாம்ராஜ் (43) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் குப்பம் கிராமம். தந்தை பெயர் காமராஜ், தாய் மலர்கொடி. தென்னரசு சாம்ராஜ் ஆத்தூர் குப்பத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை வகித்தவர்.
இவரது தாயார் மலர்கொடி அமைச்சர் கே.சி. வீரமணி உடன்பிறந்த மூத்த சகோதரி ஆவார். இதன்மூலம் தாய்மாமாவை எதிர்த்து தென்னரசு போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அமைச்சர் கே.சி.வீரமணியை எதிர்த்து அவரது அக்காள் மகன் போட்டியிடுவது தொகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.