பூச்சி என பெயர் வைத்து வளர்த்த தெருநாய் - விபத்தில் உயிரிழந்தபோது கதறி அழுத ஜெயலலிதா
தான் தெருவில் கண்டெடுத்து இரண்டுமாத குட்டியாக கொண்டுவந்த தெருநாய் விபத்தில் உயிரிழந்த போது ஜெயலலிதா கதறி அழுதுள்ளார்.
ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக அறியப்பட்டாலும் அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் அவரை பற்றி சொல்வது, மன்னிக்கும் மனம் கொண்டவர். எதையும் எளிதில் நம்பிவிடுவார். மென்மையான மனது கொண்டவர் என்பதே.
அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்கின்றனர். 1970 களில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா சொன்னது இவ்வளவு பெரிய மாளிகையில் தனியாக வசிக்கிறீர்களே... போரடிக்கவில்லையா?” என்ற கேள்விக்கு,
“யார் சொன்னது நான் தனியாக வசிக்கிறேன் என்று , என் வீட்டில் நான், என் சித்தி, சித்தப்பா, என் 7 குழந்தைகள் மற்றும் 12 வேலையாட்கள் வசிக்கிறோம் ” என்று பதில் தர நிருபருக்கு அதிர்ச்சி.
ஏழு குழந்தைகளா ? என்று கேட்க ஆமாம் “நான் குழந்தைகள் எனச் சொன்னது நான் வளர்க்கும் நாய்களை” என ஜெயலலிதா சிரித்தபடியே கூறியுள்ளார். அந்த அளவுக்கு பேதம் பார்க்காமல் நாய்கள் மீது அத்தனை பிரியம் கொண்டிருந்தார் அவர்.
ஒரு முறை படப்பிடிப்பில் ஓய்வாக அமர்ந்திருந்த போது அங்கிருந்த தெரு நாய்களை ஸ்டுடியோ ஊழியர்கள் விரட்டியடித்ததை ஜெயலலிதா பார்த்துள்ளார். மீண்டும் ஷாட்டுக்குக் கிளம்பியபோது காலில் ஏதோ உறுத்த குனிந்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார். விரட்டப்பட்ட நாயின் பிறந்து 2 மாதமே ஆன நாய்க்குட்டி, அவரை பரிதாபமாகப் பார்க்க, அதை காரில் ஏற்றி வீட்டுக்குக்கொண்டு வந்துள்ளார்.
அதன் வேகத்தை பார்த்து குறும்பாக அந்த நாய்க்குட்டிக்கு ‘பூச்சி’ என பெயரும் வைத்துள்ளார். சூட்டிங் போய்விட்டு திரும்பி வரும்போது மற்ற விலை உயர்ந்த நாய்களுடன் பூச்சியும் வேகமாக ஓடி வந்து அன்பை காட்டும் போது அப்படியே மகிழ்ந்து போய் விடுவாராம்.
இப்படியே 8 மாதம் ஓடிவிட ஒரு நாள் ஜெயலலிதா வெளியூருக்கு படப்பிடிப்புக்குச் சென்றிருந்த நிலையில் , கார் வரும் சத்தம் கேட்டு வேலையாள் கதவைத் திறக்க தன் எஜமானியைப் பார்க்காமல் பல நாட்கள் ஆன ஆர்வத்தில் ஜெயலலிதா கார் நிற்கும் இடத்துக்கு பூச்சி வேகமாக வெளியே ஓடிவர அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பூச்சி உயிரிழந்தது.
வழக்கமாக படபிடிப்பு முடிந்து வீடு திரும்பிய ஜெயலலிதா வேகமாக ஓடிவரும் பூச்சியை காணாமல் பூச்சி எங்கே என்று பெயர் சொல்லி கூப்பிட்டுள்ளார்.
வேலைக்காரர்கள் தயங்கியபடி சோகத்துடன் பூச்சி ஜீப்பில் அடிபட்டு உயிரிழந்த தகவலை கூற அப்படியே உடைந்து கதறி அழுதுள்ளார் ஜெயலலிதா. ஒரு குட்டியை பாதுகாப்பாக பார்க்க முடியவில்லை உங்களால் என வேலையாட்களை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.
தான் முதல்வராக இருந்த போதும் அரசியல் வாழ்க்கையில் பிசியாக இருந்த போதும் ஜெயலலிதா நாய்களை வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை குறைத்ததே இல்லை என்கின்றனர்.
வருடந்தோறும் அவரது பிறந்த நாளுக்கு அழகான குட்டி நாய் ஒன்று கட்டாயம் கார்டனுக்கு புது வரவாக வருமாம். கொஞ்சம் வளர்ந்துவிட்டால் அவை கொட நாட்டில் இயற்கை சூழ்நிலையில் கொண்டுவிடுவார்களாம்.
1998 ல் தேசிய ஜனநாயக் கூட்டணி கூட்டத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு தகவல் வருகிறது தான் ஆசையாக வளர்த்து வரும் நாய் ஜூலி உயிரிழந்துவிட்டது எனபது தான் அது.
இதை கேட்டவுடன் துக்கம் தாளாமல் கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஜெயலலிதா வெளியேறி உள்ளார். பிசியான அரசியல்வாதியாக இருந்த போதும் அவருக்குள்ளும் இது போன்ற மென்மையான குணம் இருந்தது எனபதற்கான எடுத்து காட்டுத்தான் இந்த சம்பவம்.
ஏன் நாய்கள் மீது இவ்வளவு பிரியம் என்று கேட்டபோது ஜெயலலிதா அளித்த பதில் எவ்வளவு ஆழமிக்கது. “என்னதான் பாலும் தேனுமாகக் கொடுத்து பாசத் துடன் பூனைகளை நீங்கள் வளர்த்தாலும் வீட்டையோ, ஊரையோ காலி செய்துகொண்டு கிளம்பும்போது அது உங்களைப் பின்தொடர்ந்து வராது.
அடுத்து அங்கு வருபவர்களுடன் நேசத்தைத் தொடரும். நாய் அப்படியில்லை... ஒருநாள் உணவிட்டாலும்கூட அது காலம் முழுவதும் உங்களைச் சுற்றிச்சுற்றி வரும். எங்குச் சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து வரும். அதுதான் நாய்களின் நன்றி குணம். அதுதான் நான் நாய்களை வளர்க்கக் காரணம்.” என்று கூறியுள்ளார்.
நன்றியுள்ள நாய்களை இனங்கண்ட ஜெயலலிதா மனிதர்கள் விஷயத்தில் தோல்வியையே அடைந்தார் எனலாம். நம்பி சேர்த்த பலரும் அவருக்கு விசுவாசமாக இல்லை. அவரது வாழ்க்கையில் பல மர்மங்களில் மரணமும் ஒன்றாகி போனது.
தான் வளர்த்த நாயிடம்கூட நன்றியை எதிர்பார்த்த ஜெயலலிதாவுக்கு தன்னால் வளர்க்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து கிடைத்தது போலி வேஷம் தான் . ஏனென்றால் அவர்கள் நாய்கள் அல்லவே மனிதர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள் அல்லவா?