தினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. திமுகவை கார்னர் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது சுமத்துவதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் நகைக் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. ஒரே குடும்பத்தில் 5 பேர் வரை முறைகேடாக நகைக் கடன் பெற்றுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலிலும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "குடும்பத்தில் ஒருவர் நகைக் கடன் பெற்றால்தான் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சொல்லவில்லை. தில்லுமுல்லு செய்து வாக்குகளைப் பெறவே பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, “நகைக் கடன் வழங்கியதில் என்னென்ன முறைகேடுகள், குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதெல்லாம் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதை மறைக்க பொருத்தமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது கூறி சேற்றை வாரி எடப்பாடி பழனிச்சாமி இறைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் அடிப்படையான உண்மைகளை மறைத்துப் பேசுகிறார்.
திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றுவோம். இதை தமிழக மக்கள் நம்புகிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்ற உடனே முக்கியமான 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டார். இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.” என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.