உங்க பிள்ளைங்க எங்கே படிக்கிறாங்க? வெங்கய்யா, சந்திரபாபு நாயுடுவை விளாசிய ஜெகன்மோகன் ரெட்டி ...
அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி கூடாது என்று கூறும் வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு ஆகியோரின் குடும்பத்து பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளாசியுள்ளார்
.
ஆந்திர மாநிலத்தில் இனி மேல் அரசுப்பள்ளிகள் ஆங்கில வழியில் செயல்படும் என்று சமீபத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.
இதுகுறித்து விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ இப்போதுள்ள போட்டி நிறைந்த உலகில் நமது பிள்ளைகள் போட்டியிட நமது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு மிகவும் முக்கியம். அதை மனதில் வைத்துத்தான் நான் இந்த திட்டத்தை அறிவித்தேன்.
நான் இந்த திட்டத்தை கொண்டுவந்தவுடன், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யான் ஆகியோர் என்னை விமர்சிக்கிறார்கள். நான் கேட்கிறேன் அவர்களின் வீட்டு குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா. அவர்களின் மார்பில் கை வைத்து உண்மையை கூற முடியுமா” எனத்தெரிவித்தார்