மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், தனக்கு ஜெயலலிதா எழுதிய குறிப்பு ஒன்றை வெளியிட்டு நெகிழ்ந்துள்ளார். மறைந்த அவர் பூங்குன்றனுக்கு எழுதிய அந்த குறிப்பின் கீழே அம்மா என்று எழுதியிருந்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உதவியாளராக பல ஆண்டுகள் இருந்தவர் பூங்குன்றன். கிட்டத்தட்ட அவரது அலுவலக பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தியவர் பூங்குன்றன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒரு சில நேரங்களில் ஜெயலலிதா திட்டும்போது பூங்குன்றனன் போயஸ் தோட்டத்தில் இருந்து கோபித்துக் கொண்ட சென்று விடுவார். ஆனால் ஒரு சில நாட்களுக்குள் ஜெயலலிதா அவரை மீண்டும் அழைத்து சேர்த்துக் கொள்வார்.

கிட்டத்தட்ட அவர்கள் இருவருக்கும் அம்மா – மகன் போன்ற உறவு இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு பூங்குன்றன் முழு நேர ஆன்மீகவாதியாக மாறிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று இரவு முழுவதும் படுத்து உறங்கினார்.


இந்நிலையில் ஒரு முறை இக்கட்டான தருணத்தில் பூங்குன்றனுக்கு ஜெயலலிதா எழுதிய குறிப்பு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் தற்போது வெளியிட்டு நெகிழ்ந்துள்ளார். 

அதில் இதய தெய்வத்துடன் வாழ்ந்த நாட்கள் படிப்பினையே. ஒரு முறை அம்மா எனக்கு எழுதிய குறிப்பு ஒன்றில், கடைசியில் அம்மா என்று குறிப்பிட்டிருந்தார். இதை படித்த எனக்கு கண்ணீர். அம்மா என்ற வார்த்தையை பலமுறை பார்த்து பெருமிதம் கொண்டேன். அம்மா என்ற வார்த்தை ஒன்றிற்காக, இந்த கடிதம் ஒன்றுதான் என்னிடம் பொக்கிஷமாக உள்ளது..

இது ஒரு சோதனையான காலக்கட்டத்தில் எனக்கு எழுதப்பட்ட குறிப்பு. அம்மா எழுதும் குறிப்புகளில் அம்மா என்று எழுதியதே கிடையாது. ஜெ.ஜெ என்று எழுதி, அதன் கீழ், க.பொ.செ (கழக பொதுச்செயலாளர்), முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் என்றே குறிப்பிடுவார்.

ஆனால் எனக்கு எழுதிய குறிப்பில் அம்மா என்று எழுதி, என்னை மகனாக பார்த்தார் என்பதே என் வாழ்நாள் பாக்யம். அதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். பதவியோ, பணமோ, “அம்மா” என்ற சொல்லுக்கு ஈடாகுமா? என்று பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.