Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை கொடுத்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் - சொன்னது எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

jayalalitha would have been alive if she get treatment in foreign - said MR Vijayabaskar ...
jayalalitha would have been alive if she get treatment in foreign - said MR Vijayabaskar
Author
First Published Mar 1, 2018, 8:29 AM IST


கரூர்

ஜெயலலிதாவை வெளிநாட்டில் இருக்கும் நல்ல மருத்துவமனைக்கு அழைத்த் சென்று சிகிச்சைக்கு கொடுத்திருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், கரூர் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கரூர் உழவர் சந்தை அருகே நேற்று இரவு நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு நகரச் செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது: "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள்? துரோகிகள் மக்கள் மத்தியில் விமர்சனங்களை பேசி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேருந்து கட்டண உயர்வை பற்றி விமர்சித்துப் பேசினார். அவர் பதவியைவிட்டு விலகும்போது போக்குவரத்து துறையில் ரூ.5300 கோடி கடனை விட்டுச் சென்றார். 60 ஆயிரம் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1300 கோடி நிலுவை தொகையை வைத்துவிட்டுச் சென்றார். அவர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கியதுபோல பொய்யான தகவல்களை பேசி வருகிறார்.

இந்த அரசை துரோக அரசு என பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் செய்த துரோகங்கள் பற்றி பலருக்கு தெரியும். அதிமுக-வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது ஏன் அவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக  அழைத்து செல்லவில்லை? என்று 1½ கோடி தொண்டர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் கேள்வி எழும்பியது.

சுதந்திர தின விழா கொடியேற்றத்தின்போது ஜெயலலிதா நிற்க முடியாமல் மூன்று தடவை உட்கார்ந்து எழுந்தார். அப்போதே அவரது உடல்நிலை சரியில்லை என தெரிந்தபோது 33 வருடங்களாக ஜெயலலிதா உடனிருந்த சசிகலா ஏன்? அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு நல்ல மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை.

மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் இலண்டன், சிங்கப்பூர் என வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திருப்பி வருகின்றனர். ஜெயலலிதாவையும் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார். 10 முதல் 15 ஆண்டுகாலம் கூடுதலாக வாழ்ந்திருப்பார். அவர் தொடர்ந்து முதலமைச்சராக இருந்திருப்பார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ராகுல் காந்தி, ஆளுநர், கட்சியின்  மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார். அவர் நலமுடன் இருக்கட்டும். துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று அவர் பேசினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios