உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருவதாகவும், ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக பொது செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, செப். 22 ஆம் தேதி அன்று உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீரிழப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக 23 ஆம் தேதி அன்று அப்போலோ மருத்துவர்கள் கூறினர். அதற்கு மறுநாள் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி அன்று லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்தார். அப்போலோ சென்ற ரிச்சர்ட் பீலே, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். நேற்று முன்தினம், எய்ம்ஸ் மருத்துவ குழுவும் அவருடன் இணைந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது.

தற்போது, மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்கவும், சீரான சுவாசம் மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலையை தொடர்ந்து மருத்தவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், ராகுல் காந்தி, தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், தமிழிசை, வெங்கையா நாயுடு, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பார்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட பலர் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து செய்தியும் அனுப்பி வருகின்றனர். 

அதிமுக தொண்டர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர், ஜெயலலிதா உடல்நலம் பெற மண்சோறு நேர்த்திக்கடன், தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அங்கபிரதட்சணம், யாகங்கள், சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அவர் ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.