தேர்தல் தோல்விக்கு பிறகு மாற்றங்களை செய்ய நீங்கள் நினைக்க வேண்டும். தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயல வேண்டும். தகுதி இல்லாதவர்களை மாற்றுவதன் மூலமே உங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
நவநீதகிருஷ்ணன் மீது எடுத்த நடவடிக்கை இப்போது தேவைதானா? இந்த நடவடிக்கை ஆரோக்கியமானதா? என்று ஜெயலலிதாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள் தனக்கு உதவியதாக கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவனை நன்றி தெரிவித்து பேசினார். இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் வகித்துவந்த வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் பதவியை ஓபிஎஸ் - ஈபிஎஸ் பறித்தனர். இந்நிலையில் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், “நவநீதகிருஷ்ணன் மீது எடுத்த நடவடிக்கை இப்போது தேவைதானா? இந்த நடவடிக்கை ஆரோக்கியமானதா? அவர் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் கட்சியை விட்டு நீக்கி இருக்கலாமே? 
அதை விட்டுவிட்டு வழக்கறிஞர் பிரிவின் செயலாளர் பதவியில் இருந்து நீக்க என்ன காரணம்? அவர் பேசியது தவறுதான்; மாற்றுக் கருத்தில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதிவியில் அவர் இருக்கும் போது அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்கலாமே! அதன் பிறகு நடவடிக்கை எடுத்திருக்கலாமே? நடவடிக்கையில் என்ன பாரபட்சம்? தொண்டர்களுக்கு ஒன்று? தலைவர்களுக்கு ஒன்றா? இதையெல்லாம் நான் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. மகளிரணி செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர், வர்த்தக பிரிவு செயலாளர் பதவியில் இருக்கும்போதே மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். மாநில பொறுப்பில் உள்ளவர்கள் ஏன் கட்சி மாறுகிறார்கள் என்று ஆராய்ந்தீர்களா?
இப்படி மாநிலச் செயலாளர்களே மனம் மாறினால் கட்சியின் நிலை என்ன? கட்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இப்படி போய்க் கொண்டிருப்பது கட்சிக்கு நல்லதா? இது என் கேள்வி அல்ல! தொண்டர்களின் கேள்வி! கரையான் அரித்த பலகையைப் போல் கழகத்தை ஆக்கிவிடாதீர்கள். அன்பால் அரவணையுங்கள், ஆறுதலாய் பேசுங்கள். பொறுப்பு வழங்க மனம் இல்லை என்றாலும் உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அன்பாய் பேசினாலே யாரும் கழகத்தைவிட்டு செல்லமாட்டார்கள். உழைப்பவர்களிடம் பேசுவதால் ஒன்றும் உங்கள் தகுதி குறைந்துவிடாது, நீங்களும் தொண்டராக இருந்து உயர்ந்தவர்கள்தான். 
உள்ளாட்சித் தேர்தலில் கட்சியை விட்டு சென்று மீண்டும் இணைந்தவர்களுக்கு, இணைய ஆசை உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மற்றவர்களின் ஒப்புதலோடு வாய்ப்பு கொடுத்தால் கழகம் உள்ளாட்சித் தேர்தலில் உறுதிப்படும். தேர்தல் தோல்விக்கு பிறகு மாற்றங்களை செய்ய நீங்கள் நினைக்க வேண்டும். தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயல வேண்டும். தகுதி இல்லாதவர்களை மாற்றுவதன் மூலமே உங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும். இதைக் சொல்வதால் என்னை நீங்கள் விமர்சனம் செய்யலாம். நான் சொல்வது கட்சியின் நலனுக்கே! தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பாருங்கள். மாற்றத்தை செய்து மாற முயற்சி செய்யுங்கள்.” என்று பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
