ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்தோடு பாடப்புத்தகங்கள்... உயர் நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு...!
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தோடு இருப்பில் உள்ள பாடபுத்தகங்கள் நோட்டுகளை விநியோகம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில் தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்க கூடாது என்றும் இரண்டு அரசுகளுக்கு இடையேயான ஈகோவினால் இதுபோல் செய்யக்கூடாது என்றும் எனவே ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது அவற்றை மாணவ,மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும், எதிர்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகளில் அரசியல் கட்சி தலைவர்களை படங்களை பிரிண்ட் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நான்கு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.