முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ நிபுணர்கள், சி.பி.ஐ. அடங்கிய குழுவை அமைக்க கோரி அதிமுக பிரமுகர் வழக்கில், 4 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அவர் மரணமடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் தலைமையிலான அமர்வு, தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் மட்டுமே உண்மை வெளிவருமா என கேள்வி எழுப்பி, மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதற்கிடையில், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவர் புதிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ நிபுணர்கள், சி.பி.ஐ. அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை பறிமுதல் செய்ய அக்குழுவுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் 22முதல் டிசம்பர் 5 வரை ஜெயல்லிதாவுக்கு வழங்கிய சிகிச்சை ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் சேர்த்து வரும் 9ம் தேதி இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்து வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட குழு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது டிஸ்சார்ஜ் அறிக்கையை சீலிட்ட கவரில் அப்பல்லோ மருத்துவமனை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
